டிஎம்எஸ் பிறந்த தினம்.

123
By -
0

சிம்மக் குரலோன் சௌந்தரராஜன் அவர்களின் 103 வது பிறந்தநாள் 
இன்று.

1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தார் செளந்தரராஜன். டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் திரைத்துரையில் பிரபல பாடகராக வலம் வந்தார்.

மொத்தம் 10,138 பாடல்களை 3,162 திரைப்படங்களுக்காக பாடியுள்ளார். ஆன்மீகம், செமி கிளாசிக்கல், கர்நாடிக், கிளாசிக்கல், லைட் மியூசிக் என பாடல்களைப் பாடியிருக்கிறார் இந்த கான குரலோன்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக ஜொலித்துவந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்டோரின் படங்களில் அதிகம் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

அவரது தமிழ் உச்சரிப்பும், குரல் வளமும் தனிச்சிறப்பு வாய்ந்தது. எஸ்.பி.பியின் குரலை எப்படி ரசிகர்கள் கண்டுபிடித்துவிட முடியுமோ அதே போல், அட இந்தப் பாட்டு டி.எம்.எஸ். பாடிய பாட்டாச்சே என்று சரியாக கணித்து விடுவார்கள் ரசிகர்கள்.

சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல், 2,500 பக்திப் பாடல்களையும் டி.எம்.எஸ். பாடியுள்ளார். 1955 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை புகழின் உச்சத்தில் இருந்தார் டி.எம்.எஸ்.

1946ம் ஆண்டு 24 வயதில் தனது முதல் பாடலை பாடினார். கடைசி பாடலை 88 வயதாக இருக்கும்போது பாடினார். திரையில் இவர் பாடிய முதல் பாடல் எம்.ஜி.ஆருக்காக ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தான் என்று கூறப்படுகிறது.

கடைசியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலை இளம் பாடகர்களுடன் இணைந்து பாடினார்.

கடந்த 2013ம் ஆண்டு மே 25ம் தேதி அவர் சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் உயிரிழந்த அவருக்கு வயது 90.

கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் என பல பட்டங்கள் இவருக்கு கிடைத்தது

எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்நாள் சாதனையாளர் விருது, முதல்வர் ஜெயலலிதா அங்கீகார விருது, எம்ஜிஆர் கோல்டு மெடல், பெல்ஜியத்தின் கவுரவ டாக்டர் பட்டம், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரை அங்கீகார விருது, தமிழக முதல்வர் மு. கருணாநிதி விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்திய அரசு நினைவு அஞ்சல் தலையையும் வெளியிட்டு டி.எம்.எஸ்.-ஐ கவுரப்படுத்தியுள்ளது. மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை கடந்த 2003ம் ஆண்டு இவருக்கு வழங்கி பெருமைப்படுத்தியது மத்திய அரசு.

எப்போதும் நெற்றியில் பட்டை, அதன் மீது வட்டமாக குங்குமம் அணிந்து இருக்கும் டி.எம்.எஸ். முகத்தையும் அவரது காந்த குரலையும் தமிழ் நெஞ்சம் என்றும் மறக்காது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)