
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள்
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது சட்டம்-ஒழுங்கு, ஊழல் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, காவல் மரணங்களைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
சட்டம்-ஒழுங்கே மாநில வளர்ச்சிக்கு அடித்தளம்
மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் காவல்துறை முக்கிய அடித்தளமாக இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றார்.
அரசு ஊழியர்கள் தங்களது பணியில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்றும் தெரிவித்தார். ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்களது சட்டபூர்வமான பணிகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
போதைப்பொருள் தடுப்புக்கு 65 தனிப்படைகள்
போதைப்பொருள் பயன்பாடு தமிழ்நாட்டின் முக்கிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அதனை முற்றிலும் ஒழிப்பதே அரசின் நோக்கம் என்றார்.
மாநிலத்தின் 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1,16,159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 பணியிடங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் நோக்கில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்தப் படைக்காக 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.357 கோடி மதிப்பிலான நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
125 பெண்கள், குழந்தைகள் மீட்பு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நடவடிக்கைகள் மூலம் இதுவரை 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், 21 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
காவல் மரணங்களைத் தடுக்க நடவடிக்கை
காவல் மரணம் என்பது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமின்றி, காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் முக்கிய பிரச்சினை என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
காவல் மரணம் ஏற்பட்டால் வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி மருத்துவ உடற்கூராய்வு மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
காவல் நிலைய மரணங்களைத் தடுக்கும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு, மருத்துவப் பரிசோதனை, தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.





