27 வருடங்களுக்கு முன் இதே போல விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்.

123
By -
0




அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்த நிலையில், அதில் பயணம் செய்த விஷ்வாஸ் குமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்திருப்பது, இந்த சோகத்திலும் கொஞ்சம் நிம்மதியைத் தரும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

40 வயதான விஷ்வாஸ் குமார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரஜை ஆவார். தற்போது அவர் லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக இந்தியா வந்து விட்டு, மீண்டும் லண்டன் திரும்புகையில் இந்த விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.


ஏர் இந்தியா கோர விபத்து

ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் காட்விக் என்ற இடத்துக்கு செல்ல மதியம் சரியாக 1.38 மணிக்குப் புறப்பட்டது. ஓடு பாதையில் இருந்து டேக் ஆஃப் ஆன சில நொடிகளிலேயே அந்த விமானம் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை, என குஜராத் சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், விஸ்வாஸ் குமார் என்ற ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக இந்தக் கொடூர விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரே ஒரு பயணி

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து எப்படி விஷ்வாஸ் குமார் வெளியேறினார் என்பது ஆச்சர்யமாகப் பேசப்பட்டாலும், அவர் ஒருவராவது உயிர் பிழைத்தாரே என்பது கொஞ்சம் ஆசுவாசம் தரும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது அவர் அகமதாபாத்திலுள்ள அசர்வா சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஷ்வாஸ் குமாருக்கு பெரிய காயங்கள் இல்லை என்றும், விரைவில் அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டன் பிரஜை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான விஷ்வாஸ் குமார், கடந்த 20 வருடங்களாக குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு மனைவியும், நான்கு வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். தனது உறவினர்களைக் காண்பதற்காக இந்தியா வந்த அவர், மீண்டும் தனது சகோதரர் அஜய் குமாருடன் லண்டன் திரும்பியபோது, இந்த விபத்தில் சிக்கியிருக்கிறார். விபத்தில் விஷ்வாஸ் குமாரின் சகோதரரின் நிலை என்ன என்பது பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

மருத்துவமனையில் இருந்தவாரே விஷ்வாஸ் குமார் சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

"விமானத்தில் நான் 11A இருக்கையில் அமர்ந்திருந்தேன். விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குள் பெரிய சத்தம் கேட்டது. பறக்கத் தொடங்கிய விமானம் திடீரென மீண்டும் தரையை நோக்கி செல்வதை நான் பார்த்தேன். அப்போது எல்லோரும் அலற ஆரம்பித்தார்கள். அதன்பின் விமானம் விபத்தில் சிக்கியது. என்ன நடக்கிறது என நான் சுதாரிப்பதற்குள் மிகப்பெரிய தீப்பிழம்பு என் கண்ணில் தெரிந்தது. கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் மிக வேகமாக நடந்து முடிந்துவிட்டது. நான் சுதாரித்து கண் விழித்துப் பார்த்தபோது, என்னைச் சுற்றிலும் உடல்களும், விமானத்தின் பாகங்களும் கிடந்தன. எங்கு பார்த்தாலும் தீ. அது என்னைத் திகில் அடையச் செய்தது."
எங்கு கால் வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒருவிதமான மயக்க நிலையில்தான் நான் இருந்தேன். என் கால்கள் பின்னிக் கொண்டன. ஆனாலும் மிகப்பெரிய ஆபத்தில் நான் சிக்கி இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது. அங்கிருந்து எப்படித் தப்பிச் செல்வது என சிந்தித்தேன்.

முதலில் அதைப் பார்த்து நான் பயந்து விட்டேன். பிறகு அங்கிருந்து எழுந்து கிடைத்த இடங்களில் எல்லாம் கால் வைத்து, தப்பி வெளியில் ஓடி வந்தேன். யாரென அடையாளம் தெரியாத நபர்கள் எனக்கு உதவி செய்தார்கள். என்னை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நடந்ததெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா என எனக்குத் தோன்றியது. ஆனால் அது கனவல்ல... நிஜமாகவே நடக்கிறது என்பதை நான் உணர சில மணி நேரங்களுக்கும் மேலானது, என அதிர்ச்சி கலந்த வார்த்தைகளில் தான் தப்பி வந்த கதையை கூறியுள்ளார் விஷ்வாஸ் குமார்.

மேலும், தன்னுடன் பயணம் செய்த தன் சகோதரரைக் காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இருக்கை எண் 11A ராசி

அகமதாபாத் விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் உயிர் தப்பியது மட்டும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை, அவர் விமானத்தில் அமர்ந்திருந்த இருக்கை எண்ணும், அதன் வரலாறும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

ஏனென்றால், இதற்கு முன்னர் 1998ம் ஆண்டு, 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தாய்லாந்து விமான விபத்திலும், ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாய்லாந்து பாடகரான ருவாங்சாங், அப்போது விபத்துக்குள்ளான தாய்லென்ட் எயர்வேஸ் A-310 என்ற விமானத்தில் பயணம் செய்ததும், இதே மாதிரி 11A இருக்கையில்தான்.

அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, தற்போது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார் ருவாங்சாங்.


தாய்லாந்து பாடகர் ருவாங்சாங் மற்றும் விஷ்வாஸ் குமார்

அதில், 27 ஆண்டுகளுக்கு முன்னர் நானும் இதே போல், 11A இருக்கையில்தான் பயணித்தேன். அது இப்போது நினைத்தாலும் திகிலாகத்தான் இருக்கிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகு 10 ஆண்டுகள் நான் விமானத்தில் பறப்பதையே தவிர்த்து விட்டேன்.
நான் யாரிடமும் பேசாமல், எப்போதும் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடிதான் அமர்ந்திருப்பேன். என் பாதுகாப்பு உணர்வைப் பராமரிக்க, யாரும் அந்த ஜன்னலை மூடிவிடாமல் தடுத்தேன். வெளியே கருமேகங்களையோ அல்லது மழைக்காலத்தையோ பார்த்தால், நான் நரகத்தில் இருப்பது போல் பயங்கரமாக உணருவேன், என விபத்தில் தனக்கேற்பட்ட அனுபவத்தால் எப்படியெல்லாம் மன அழுத்தத்திற்கு ஆளானேன் என விளக்கியுள்ளார் ருவாங்சாங்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)