08.08.2025 – அனைத்து அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
கொத்தடிமைக் கூலி முறைகளான தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் பணி நியமனங்களை திரும்பப்பெற வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி….
08.08.2025 – அனைத்து அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
கடந்த 27.07.2025 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 08.08.2025 அன்று அனைத்து அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் நடத்திடுவது என முடிவெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் தொகுப்பூதிய முறைகளை அமுல்படுத்துவதுடன் காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் என கொத்தடிமை கூலிமுறைகளை தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறது. மருத்துவத்துறையில் அரசாணை எண் 300ன்படி நிரந்தரப்பணியிடங்களை சரண்டர் செய்யப்பட்டு, Nurse, Pharmachist, Lab Technician உள்ளிட்ட 4000 பணியிடங்கள் காண்டராக்ட் மூலம் நியமனம் செய்யப்படவுள்ளன. பல்நோக்கு பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு ஊதியமுறைகளில் எந்தவித உத்தரவாதமுமின்றி பணியாற்றிவருகிறார்கள்.
நில அளவைத்துறையில் சென்ற ஆண்டு அரசாணை எண் 297 ன்படி 707 தற்காலிக Field Assistant பணியிடங்கள் ஓராண்டுக்கு நியமனம் செய்யப்பட்டது. தற்போது அரசாணை 420ன்படி மேலும் மூன்றாண்டுகளுக்கு தற்காலிக ஊதியமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக பலகட்ட தொடர் போராட்டங்களுக்குப் பிறகு ஏற்கனவே சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்திட போராடி வரும் நிலையில் தற்போது அப்பணியிடங்களை அரசாணை எண். 95 மற்றும் 33ன்படி தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட முடிவெடுத்துள்ளது இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. பட்டுவளர்ச்சித்துறையில் குன்னூர், ஒசூர், தாளவாடி, ஊத்தங்கரை, கொள்ளட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான காடுகளை/ தோட்டங்களை இத்துறையிடமிருந்து அரசு கையகப்படுத்தும் முடிவானது, இத்துறையை அழிக்கும் நோக்கமாகும். அரசு ஐடிஐ களில் பயிற்றுனர்கள் தொகுப்பூயத்தில் பணி நியமனம்செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து துறைகளிலும் நிரந்தர பணியிடங்களை ஒழித்துவிட்டு கொத்தடிமை கூலி முறைகளை அமுல்படுத்திட அரசு முயற்சித்துள்ளது. மேலும், அமைச்சுப்பணியாளர்களையும் தொகுப்பூதிய முறைகளில் நியமனம் செய்திட முடிவெடுத்துள்ளது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போலுள்ளது. இது அரசு ஊழியர்களை மட்டுமல்ல, படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். சமூக நீதி அரசு என்று சொல்லும் தமிழ்நாடு அரசு இவ்வாறு நீதியற்ற பணிநியமனங்களை நடைமுறைப்படுத்துவதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
எனவே, மேற்கண்ட பணி நியமனங்களை திரும்பப்பெறுவதுடன் சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட்களில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், PPP & COE பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து கொத்தடிமை கூலிமுறை பெறும் அனைவரையும் தேர்தல் கால வாக்குறுதிப்படி அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி 08.08.2025 அன்று தமிழகமெங்கும் அனைத்து அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் மிக எழுச்சியோடு நடத்தப்படவுள்ளது. பெருவாரியான அலுவலகங்களில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டு, அதிகப்படியான ஊழியர்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…







