
கள்ளக்குறிச்சியில் கார் மோதி ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர் – போலீசார் மீட்டு உயிர் காப்பாற்றினர்!
தார் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது கார் மோதியதால் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சுயநினைவின்றி கிடந்ததை போலீசாரால் மீட்கப்பட்டு உயிர் பிழைத்த வாலிபர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே 20.08.2026 அன்று இரவு சுமார் 9 மணியளவில் சாலை விபத்து ஏற்பட்டது. லா.கூடலூர் ஊராட்சி, மேலத்தேனூர் குக்கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் ஏழுமலை (சுமார் 40) என்பவர் லாலாபேட்டையில் இருந்து மாடாமுண்டி கூட்டுரோடு நோக்கி சாலையோரமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆஞ்சநேயர் கோவில் அருகே அதே சாலையில் சென்றுகொண்டிருந்த வெள்ளை நிற கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஏழுமலை மீது மோதியதாக கூறப்படுகிறது. கார் மோதியதில் அவர் பலத்த காயமடைந்து சாலையில் ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் திருப்பாலபந்தல் மற்றும் பகண்டை எக்ஸ் ரோடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஏழுமலையை மீட்டனர்.

பின்னர் போலீசாரின் உதவியுடன் ஏழுமலை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குக் காரணமான கார் மற்றும் அதன் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது





