
தமிழ் நாடு நாள்
சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட அன்னை நிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரை பேரறிஞர் அண்ணா சூட்டிய நாள் இன்று.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் பகுதிகள் இணைந்திருந்தபோது ‘சென்னை மாகாணம்’ என்ற பெயர் இருந்தது. ஆனால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபிறகும் ‘சென்னை மாகாணம்’ என்ற பெயர் மாற்றப்படாமல் இருந்தது. ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டவேண்டும் என்று சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். தந்தை பெரியாரும் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்ட தொடர்ந்து வலியுறுத்தினார்.
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றபிறகு 1968, ஜூலை 18 அன்று தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
‘நம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகும் தம்முடைய இல்லங்களிலே அமர்ந்து பேசிக்கொள்ளுகின்ற நேரத்தில், பெருமையோடு சொல்லிக் கொள்ளஇருக்கிறார்கள். “என்னுடைய பாட்டனார் காலத்திலே தான் நம்முடைய நாட்டுக்கு “தமிழ்நாடு” என்ற பெயர் இடப்பட்டது என்று’ என்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர் அண்ணா, ‘’சட்டமன்றத் தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்ற இந்த நன்னாளில் “தமிழ்நாடு” என்று நான் சொன்னதும் “வாழ்க” என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்குத் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன்’’ என்று சொல்லி ‘தமிழ்நாடு’ என்று முழங்க, உறுப்பினர்கள் ‘வாழ்க’ என்று வாழ்த்து முழக்கம் எழுப்பினார்கள்.
நாமும் சொல்வோம் தமிழ்நாடு வாழ்க!





