சர்வதேசம்
ஓய்- பிரசன்னா வெங்கடேஷ்
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனுடன் ஈரானின் பதிலடி தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.01 சதவீதம் உயர்ந்து 99.03 டாலராக இருந்தது.

ஈரான் படைகளின் தாக்குதல்
ஈரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், F-35 போர் விமானம் மற்றும் RQ-4 ட்ரோனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. F-35 உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானம். ஈரான் ஏற்கனவே எஃப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பதிலடி கொடுக்கும் உரிமை தமக்கு இருப்பதாக ஈரான் வலியுறுத்தியுள்ளது.
கமேனியின் கடுமையான எச்சரிக்கை
ஒரு தனி அறிக்கையில், ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா கமேனி, வளைகுடா நாடுகள் இனி அமெரிக்க இராணுவ தளங்களுக்கு கேடயமாக இருக்காது என்றும், அமெரிக்காவிற்கு அப்பகுதியில் பாதுகாப்பான புகலிடம் இல்லை என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார். கமேனியின் அறிக்கை வளைகுடா பிராந்தியத்தில் பதட்டங்களை மேலும் அதிகரித்தது.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே திட்டமிட்டிருந்தன. அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வழக்கம் போல் தோல்வியில் முடிந்தது. வழக்கமாக, ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரிக்கும், ஆனால் இந்த முறை ஈரானின் சில கோரிக்கைகளை ஏற்க டிரம்ப் நிர்வாகம் தயாராக இருந்தது, ஆனால் இந்த முறை அமெரிக்க நட்பு நாடுகள் கடுமையாக மறுத்துவிட்டன.
அமெரிக்க தாக்குதல்
தெற்கு ஈரானில் அமெரிக்கா திங்களன்று புதிய தாக்குதல்களை நடத்தியது. ஈரானிய ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை பதிக்க முயன்ற படகுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
US Central Command (Centcom) இந்த தாக்குதல்களை “தற்காப்பு நடவடிக்கை” என்றும் ஈரானியப் படைகளால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் விவரித்துள்ளது. மேலும், போர் நிறுத்தத்தின் போதும் தங்கள் படைகள் கட்டுப்பாட்டில் இயங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
முழுக்க முழுக்க போராக மாறுகிறதா..?
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் எண்ணெய் வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அதேநேரம், இந்த தாக்குதல் முழுக்க முழுக்க போராக மாறுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
Source link



