டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் நிதின் நபின், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 2026) காலை முறைப்படி பதவியேற்றார். 45 வயதான அவர், பாஜக அரசியலில் ஒரு தலைமுறை மாற்றத்தின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறார்.
பதவியேற்புக்குப் பிறகு பேசிய நிதின் நபின், இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டு வருவது குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தினார். 2024 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் ஆற்றிய உரையை நினைவுகூர்ந்த அவர், அரசியல் என்பது குறுக்குவழி அல்ல; அது நீண்ட ஓட்டப் போட்டி என தெரிவித்தார்.
“அரசியல் 100 மீட்டர் ஓட்டம் அல்ல. அது நீண்ட மாரத்தான். வெற்றி வேகத்தால் அல்ல, தாங்கும் சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது,” என்று நிதின் நபின் கூறினார்.
இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்பது தீர்வு அல்ல என்றும், தீவிரமான பங்கேற்பே நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமைப்பு ரீதியான மாற்றங்கள்
பாஜகவின் “கண்காணிப்புக் கோபுர” (Observation Tower) அமைப்பு குறித்து நிதின் நபின் குறிப்பிட்டார். இந்த அமைப்பின் மூலம், கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உயர் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இது அவரது தலைமையில் அமைப்பு ரீதியான புதிய நியமனங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தொடரும் தலைமுறை மாற்றம்
முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலத்தில் தொடங்கிய தலைமுறை மாற்றத்தின் தொடர்ச்சியாகவே நிதின் நபினின் தேர்வு பார்க்கப்படுகிறது. அப்போது மாவட்ட அளவில் இருந்து மாநில அளவிற்கு வரை கட்சித் தலைமையின் சராசரி வயதை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாஜக முதல்வர்களிடையிலும் இந்த மாற்றம் தெளிவாகக் காணப்படுகிறது. தேவேந்திர ஃபட்னாவிஸ், யோகி ஆதித்யநாத் போன்ற தலைவர்கள் இளம் வயதில் முதல்வர் பதவியேற்றது இதற்குச் சான்றாகும்.
2029 மக்களவைத் தேர்தலை நோக்கி, பாஜக இளம் தலைமையுடன் பயணிக்கத் தயாராகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். நிதின் நபினின் எதிர்கால அணியமைப்பு மற்றும் நியமனங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



