
கோவை மாநகராட்சி 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம்
புது தில்லி: அதிமுக ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் முறையற்ற வகையில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு, அப்போதைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவியில் இருந்த காலத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, இறுதியில் 54 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இந்த நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சுகாதாரப் பணியாளராக இருந்த ஈஸ்வரி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தொடக்கத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், மேல்முறையீட்டில் விசாரணை நடத்திய நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், ஆட்சேர்ப்பு வாரிய விதிமுறைகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கண்டறிந்தனர்.
இதையடுத்து, அந்த 54 பேரின் நியமனங்களையும் ரத்து செய்த நீதிமன்றம், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவித்தது.
இதனால், 54 இளநிலை உதவியாளர்களின் நியமனம் சட்டவிரோதமானது என உறுதி செய்யப்பட்டதுடன், அவர்களை உடனடியாகப் பணியிலிருந்து நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





